வியாபாரம் - கிராமப் பொருளாதாரம்...

கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மற்ற அனைத்தும் அதன் சார்புத்தொழிலாகவும் இருக்கும். என்னதான் வீட்டில் டீ குடித்தாலும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டே டீக்கடைகளில் அரட்டை கச்சேரி நடத்தினால்தான் பெரிசுகள் திருப்தி அடையும். சிறிய மளிகைக்கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தங்களால் இயன்ற அளவு நகரங்களில் இருந்து மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற்ப்பார்கள். ஓரளவுக்கு தங்களுக்கான அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், எல்லாக்கிராமங்களுமே தங்களின் பெரும்பாலான தேவைகளுக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களைத்தான் நம்பியிருக்கின்றன.

ஒரு காலத்தில் வார சந்தைகள் மூலமாகத்தான் எல்லாப் பொருட்களும் வாங்கினர்.இப்போது சந்தைகள் ஒழிந்துவிட்டன, தென் தமிழகத்தில் மட்டும் இன்னும் பரவலாக இருக்கிறது. அதே போல ஆடு, மாடுகள் கிராமங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. மகளீர் சுய உதவிகுழுக்கள் நிறைய கிராமங்களில் இப்போது பொருளாதார ஆதாரங்களை உயிர்ப்பித்தாலும் நமது நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கிய கிராமங்கள் மெல்ல நகரங்களின் சாயங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்க்கு முழு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.

நீங்கள் புதிதாக ஒரு தொழிலை துவங்க வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏற்ற சரியான இடம் இப்படி கிராமங்கள் சூழ்ந்த சிறு நகரங்கள்தான். இங்கு நீங்கள் ஒரு உணவகமோ அல்லது சிறிய பல்பொருள் வணிகம் செய்யும் அங்கடியோ, வேறு நீங்கள் விரும்புகிற எந்த வியாபாரமோ, அதற்கு இப்படிப்பட்ட இடங்கள்தான் சரியான தேர்வு. பெருநகரங்களில் நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் அதற்க்கான முதலீடு மிக அதிகம் தேவைப்படும் மேலும் உங்களுக்கான வாடிக்கையாளரை நீங்கள் மெல்லத்தான் பெற முடியும். ஆனால் சிறு நகரங்களில் நீங்கள் தொடங்கும் தொழிலுக்கு உங்கள் கிராமத்து ஆட்கள் அனைவரும் வாடிக்கையாளர் ஆவார்கள். மேலும் சுற்றுவட்டார மக்களும் உங்களுக்கு அறிமுகம் ஆகியிருப்பார்கள் அவர்களும் உங்கள் சேவையின் தரத்தை சரியாக வைத்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

பெரிய நகரங்களில் தொழில் செய்தால் ஆடிக்கு கூழ் ஊத்துகிரவர்கள் முதல் ஐயப்ப பக்தர்கள்வரை வசூல் வேட்டை செய்வார்கள். மேலும் அரசியல்வாதிகள், காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், சில இடங்களில் உள்ளூர் தாதாக்கள் வரை நம்மை ஆதிக்கம் செய்வார்கள், ஆனால் உங்கள் பகுதியில் நீங்கள் வியாபாரம் செய்ததால் உங்களை இம்மாதிரி சில்லறை ஆசாமிகள் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

சிறுநகரங்களில் நீங்கள் எத்தகைய முதலீட்டை செய்வதாக இருந்தாலும் எதிர்காலத்தில் குறைந்தது பத்து கிளைகளாவது துவக்கும் எண்ணத்துடன் ஆரம்பியுங்கள், உங்களது திட்டமிடல் சரியாக அமைந்தால் பெரிய நகரங்களுக்கும் உங்கள் கிளைகளை பரப்பமுடியும். பெரிய நிறுவனம் ஆகிவிட்டால் சிறிய பிரச்சினைகள் உங்களை தொந்தரவு செய்யாது. கிராம மக்களால் இருக்கும் ஒரே தொந்தரவு கடன் கேட்பார்கள், கொடுக்காவிட்டால் குறைசொல்வார்கள். இதற்க்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. ஒன்று: ஆரம்பத்தில் இருந்தே கடன் யாருக்கும் கொடுப்பது கிடையாது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பது. இரண்டு: சிறிய அளவில் மட்டுமே கடன் கொடுப்பது அதாவது வராவிட்டாலும் சமாளித்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிற அளவு. இந்த வழியால் நல்ல வாடிக்கையாளர்கள் நம்மிடம் தொடர்ந்து வருவார்கள். ஏமாற்ற நினைப்பவர்கள் ஒரு தடவையோடு நம் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

இது குறைந்த முதலீட்டுக்கான யோசனை மட்டுமே. மற்றபடி பணம், திறமை, கட்டமைப்பு இம்மூன்றும் இருந்தால் உங்களால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூலைக்கும் சென்று ஜெயிக்கமுடியும்.

0 Responses

Post a Comment