கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி http://www.siruppiddy.net/?p=8419


பயோ ஆல்கே மூலம் பயோடீசல் உற்பத்தி

அப்துல் கலாம் ஆலோசனை

நாம் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கிறோம், மக்கிய எரிபொருள் மூலம் நாம் உற்பத்தி செய்யும் கார்பன்டை ஆக்ஸைடு உலகில் வெப்பமயமாதலை தோற்றுவிக்கிறது, அதனால் ஏற்படும் விளவுகளில் இருந்து நாம் எபபடி இந்த உலகத்தை காப்பது??
தூத்துகுடி பகுதி சூரிய ஒளி எரிசக்தி உற்பத்திக்கு மிகவும் ஏற்ற இடம், இங்கு சூரியஒளி மின்சாரப் பூங்காவும், அத்தோடு கடல் தண்ணீர் மூலமாக டீசாலினேசன், அதாவது கடல் தண்ணீரை சுத்திகரித்து அதன் மூலமாக சுத்தமான குடிதண்ணீரை உற்பத்தி பண்ணி, அதே கடல் தண்ணீரை வைத்து பயோ ஆல்கே உற்பத்தி பண்ணி அதன் மூலம் பயோடீசலை உற்பத்தி பண்ணும் முதல் கேந்திரமாக மாறி ஒரு கார்பன் நீயூட்டரல் காம்ப்லக்ஸாக மாறி, பிலாஸ்டிக் இல்லாத, ஒரு தூய்மையான, வாழ்வு வளம் பெறவேண்டும்.
நன்றி :http://dr.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=28&menuname=Speeches%20/%20Lectures&linkid=68&linkname=Recent&content=1889&columnno=0&starts=0&menu_image=-&contentsForum=Address%20and%20interaction%20with%20the%20Students%20of%20%20UPM%20Matriculation%20School,&titlename=null

10 முதல் 18 பேர் செல்லும் விமானங்களை தயாரிக்க மஹிந்திரா திட்டம்

பெங்களூர்: சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில், 10 முதல் 18 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சிறிய ரக விமானங்களை தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் மாபெரும் நிறுவனமாக வளர்ந்து வரும் மஹிந்திரா குழுமம், மஹிந்திரா ஏரோஸ்பேஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் விமான தயாரிப்பிலும் கால் பதித்துள்ளது.

நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரியுடன் இணைந்து 5 பேர் பயணம் செய்யும் வகையில் பிஸ்டன் எஞ்சின் பொருத்தப்பட்ட என்எம்-5 என்ற பெயரில் சிறிய புரோட்டோ டைப் விமானத்தை வடிவமைத்துள்ளது.

இந்த சிறிய ரக விமானம் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து சோதனைஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை கருதி, 10 முதல் 18 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சிறிய விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்விந்த் மெஹ்ரா கூறியதாவது:

" ஆண்டுதோறும் இந்தியாவில் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகளும், 1.5 கோடி பக்தர்களும் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களுக்கு செல்கின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலாத்துறையில் சிறிய ரக விமானங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, 10 முதல் 18 பேர் வரை பயணம் செய்யும் வசதி கொண்ட விமானங்களை தயாரிக்க உள்ளோம்.

இதற்காக, பெங்களூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நரசபுரா என்ற இடத்தில் புதிய தொழிற்சாலையை கட்டி வருகிறோம். இன்னும் ஓர் ஆண்டுக்குள் அரசிடமிருந்து சிறிய விமானங்கள் தயாரிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.

இந்த நிலையில், சிறிய விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தும் முயற்சிகளையும் மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. [
தேங்க்ஸ் TO http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/3-mahindra-aerospace-plans-build-10-18-seat-aeroplanes-aid0173.html

இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: கவலையோடு வேடிக்கை பார்க்கும் இந்தியா!

இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால், இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

இந்தியாவை ஒட்டி தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களைத் தேடவும், அதை தோண்டியெடுக்கவும் சீனாவுக்கு சர்வதேச கடல் படுகை ஆணையம் (International Seabed Authority-ISA) அனுமதியளித்துள்ளது. இத் தகவலை சீனாவின் கடல் தாதுக்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

1979ம் ஆண்டு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள் கடல் படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மெக்சிகோ அருகே கடலுக்குள் பெரும் மலைகளையும் அதன் மீது சிம்னி போன்ற அமைப்புகளையும் கண்டனர். அந்த சிம்னிகளில் இருந்து சுடுநீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதிகளைச் சுற்றி ஏராளமான உலோகத் தாதுக்கள் இருப்பதும் தெரியவந்தது.

அந்தத் தாதுக்களில் தாமிரம் (copper), துத்தநாகம் (zinc), ஈயம் (lead), தங்கம், வெள்ளி ஆகியவை அடங்கும். இவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக உள்ளன.

இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த கனிமங்கள் குறித்த ஆர்வமும், அதை தோண்டியடுக்க போட்டியும் ஆரம்பமானது.

இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களை தோண்டியெடுக்க சீனா தீவிரமாக களமிறங்கி, அனுமதியும் பெற்றுவிட்டது. சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனா இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதியில் கடலுக்கடியில் கனிமங்களைத் தோண்டலாம்.

மேலும் கிழக்கு பசிபிக் கடலில் 75,000 சதுர கி.மீ. பரப்பளவிலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைத்த கையோடு, பசிபிக் கடலில் தனது ஆழ்கடல் ஆய்வுக் களத்தை இறக்கிவிட்டுவிட்டது சீனா. நேற்று 5,180 மீட்டர் ஆழத்தை எட்டிவிட்ட இந்தக் கலத்தில் 3 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதையடுத்து இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. கனிம ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை ஒட்டிய பகுதிகளி்ல் சீனாவின் கடற்படை கப்பல்கள் சுற்றி வரும். இந்தப் பகுதியின் கனிமப் படிமங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சீனா வசம் போகும். மேலும் இந்தப் பகுதியில் நடமாடும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தையும் சீனாவால் இனி கண்காணிக்க முடியும்.

இது குறித்த தனது கவலையை இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு (Directorate of Naval Intelligence-DNI) மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நாம் ராணுவ உதவி செய்யாவிட்டால் சீனா போய் உதவி செய்துவிடுமே என்ற கவலை உள்ள மத்திய அரசுக்கு, நமது நாட்டுக்கு அருகிலேயே சீனா கடலைத் தோண்ட ஆரம்பித்துள்ளது குறித்து கவலையில்லை போலிருக்கிறது. இதனால், இந்த விஷயத்தில் இதுவரை மத்திய அரசு வாயே திறக்கவி்ல்லை.
நன்றி http://thatstamil.oneindia.in/editor-speaks/2011/08/china-gains-rights-explore-indian-ocean-aid0090.html

ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி

மின்சார தமிழர்

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!
அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...

உலகம் முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதால், மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என அனைத்து நாட்டு வல்லுநர்

களும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வீட்டில் வைத்தே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவித்ததோடு,செயலிலும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கே.ஆர். ஸ்ரீதர். ஆச்சரியம்தானே?

1960-ம் ஆண்டு பிறந்த கே.ஆர். ஸ்ரீதர், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்றார். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் பட்டம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்ற கே.ஆர். ஸ்ரீதருக்கு, உடனடியாக வேலையைக் கொடுத்தது நாசா நிறுவனம். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிப் பணியில் தனது சகாக்களுடன் ஈடுபட்டு வந்தார் கே.ஆர். ஸ்ரீதர்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியதால் சற்று அதிர்ச்சியடைந்த கே.ஆர். ஸ்ரீதர், தற்செயலாக ஒரு பணியில் ஈடுபட்டார். அதுவே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஏதோ ஒரு சக்தியில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸிஜனை வைத்து அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியைச் சேர்த்தால் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஸ்ரீதர்.


என்ன ஆச்சரியம்! ஆக்ஸிஜனும், இயற்கை எரிவாயுவும் சேரும்போது மின்சாரம் உருவாவதை உணர்ந்த ஸ்ரீதர், மேற்கொண்டு சில மாற்றங்களைச் செய்து உருவாக்கியதுதான் "ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி.

தனது தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் டூயரை நாடினார்.

இந்த ஜான் டூயர் சாதாரண ஆள் கிடையாது. நெட்ஸ் கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தொடக்கத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஒப்புக்கொண்ட ஜான் டூயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர். இந்திய மதிப்புப்படி, ஏறத்தாழ |490 கோடி. ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பதால் இந்த முதலீடை ஜான் டூயர் செய்தார்.
thanks to http://kiramthukakkai.blogspot.com/2011/07/blog-post_08.html

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது. இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.


பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள்.

உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
நன்றி http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=432267&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

எத்தனால் வாகன எரிபொருளாக உற்பத்தி செய்ய

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்

First Published : 01 Jun 2011 01:51:41 AM IST


பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.கட்டுரையாளர்: கால்நடை மருத்துவர்.

நன்றிhttp://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=425473&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D